என் மலர்
தமிழ்நாடு

திருப்பத்தூரில் 59 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்
- வேங்கைபட்டிக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார்.
- வீடுகளை பெற்ற பயனாளிகள் முதல்-அமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டை வேங்கைபட்டியில் ரூ.2.92 கோடியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இங்கு 100 வீடுகள், ஆரம்ப சுகாதார நிலையம், ரேசன்கடை உள்ளிட்ட கட்டிடங்களும், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, தெரு விளக்குகள், தார்சாலை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சமத்துவபுரத்தின் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை மதுரைக்கு வந்தார். மதுரை-நத்தம் சாலையில் ரூ.120 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலூரில் உள்ள ஓட்டலில் இரவில் தங்கிய அவர், இன்று காலை 9 மணிக்கு அங்கிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார். வழிநெடுகிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.
பின்பு வேங்கைபட்டிக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார். முன்னதாக சமத்துவபுரத்தின் முன் பகுதியின் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதைதொடர்ந்து சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறுவர் பூங்கா, அங்கன்வாடி மையம், விளையாட்டுமைதானம், ரேசன்கடை, முன்னாள் அமைச்சர் கே. மாதவன் நினைவு நூலகம் உள்ளிட்டவைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையடுத்து பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார். வீடுகளை பெற்ற பயனாளிகள் முதல்-அமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, கார்த்தி சிதம்பரம் எம்.பி., தமிழரசி எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் ஏற்கனவே நிறைவு பெற்ற ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 59,162 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தி.மு.க.வினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.