search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க பிரமுகர் தற்கொலை: கடன் பிரச்சினை காரணமா?-பரபரப்பு கடிதம் சிக்கியது
    X

    அ.தி.மு.க பிரமுகர் தற்கொலை: கடன் பிரச்சினை காரணமா?-பரபரப்பு கடிதம் சிக்கியது

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவின் தந்தையும், தாயும், அவர்களது மகளை பார்ப்பதற்காக சென்று விட்டனர்.
    • மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வடவள்ளி:

    கோவை தொண்டாமுத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் வேணுகோபால்.இவரது மகன் மாரிமுத்து (வயது32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் அ.தி.மு.க. தொண்டாமுத்தூர் பேரூராட்சி 14-வது வார்டு துணை செயலாளராக இருந்துள்ளார். தற்போது தொண்டாமுத்தூர் பேரூராட்சி தொழில்நுட்ப பிரிவில் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார். இதுதவிர இவர் தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இ-சேவை மையமும் நடத்தி வந்தார்.

    32 வயதை கடந்து தனக்கு இன்னும் திருமணம் ஆகாததால் மாரிமுத்து மன வேதனை அடைந்தார். இதனால் கடந்த சில நாட்களாக இதுகுறித்து தனது தாய், தந்தையிடம் புலம்பியுள்ளார்.

    அவர்கள் மாரிமுத்துவுக்கு ஆறுதல் கூறி அவரை தேற்றி வந்தனர். இருந்த போதிலும் அவர் மனவருத்தத்துடனேயே காணப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவின் தந்தையும், தாயும், அவர்களது மகளை பார்ப்பதற்காக சென்று விட்டனர்.

    இதனால் மாரிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று வழக்கம் போல இ-சேவை மையத்திற்கு மாரிமுத்து சென்று பணியாற்றினர்.

    அங்கிருந்து மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் மகள் வீட்டிற்கு சென்றிருந்த மாரிமுத்துவின் தாய், தந்தையினர் மாலையில் வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியான அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது மகன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதனை பார்த்ததும் அவர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்தனர். வீட்டில் அவர் இறப்பதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்துள்ளரா என வீடு முழுவதும் சோதனையிட்டனர்.

    அப்போது வீட்டில் உள்ள அறையில் மாரிமுத்து தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் தொந்தரவும் செய்ய வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது.

    அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இவருக்கு அதிகளவில் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற முயற்சித்ததாகவும், ஆனால் கடன் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    இதனால் அவர் கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×