search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தலையில் கல்லை போட்டு தாயை கொன்ற 9-ம் வகுப்பு மாணவன்
    X

    தலையில் கல்லை போட்டு தாயை கொன்ற 9-ம் வகுப்பு மாணவன்

    • மகனுக்கு சரிவர படிப்பு வராததால் யுவராணி மகனை அடிக்கடி கண்டித்துள்ளார்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராணியின் மகன் விடுதியில் இருந்து தன்னால் தங்கி படிக்க முடியாது என்று கூறி வீட்டுக்கே வந்து விட்டார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள சுங்ககாரன் பாளையம் அடுத்த தேசிகிராமத்தை சேர்ந்தவர் அருள்செல்வன். காண்டிராக்டர். இவரது மனைவி யுவராணி (36). இவர் டானா புதூரில் உள்ள மின்வாரியத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

    இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார். மகள் புளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மகனுக்கு சரிவர படிப்பு வராததால் யுவராணி மகனை அடிக்கடி கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராணியின் மகன் விடுதியில் இருந்து தன்னால் தங்கி படிக்க முடியாது என்று கூறி வீட்டுக்கே வந்து விட்டார்.

    பின்னர் அவர் வீட்டிலிருந்து தினமும் சத்தியமங்கலத்தில் உள்ள பள்ளிக்கு சென்று வந்தார். தொடர்ந்து யுவராணி மகனை நன்றாக படிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இது அவரது மகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்விலும் யுவராணியின் மகன் சரியாக மார்க் எடுக்கவில்லை. இதை அடுத்து யுவராணி தனது மகனிடம் தந்தையிடம் கூறி மீண்டும் உன்னை பள்ளியில் உள்ள விடுதியில் சேர்க்கப்போகிறேன் என்று கூறி வந்தார். இதனால் யுவராணி மீது அவரது மகனுக்கு மேலும் கோபம் அதிகரித்தது.

    நேற்று யுவராணியின் கணவர் அருள்செல்வன் வேலை விஷயமாக கோயம்புத்தூர் சென்று விட்டார். அப்போது வீட்டில் யுவராணி தனது மகன், மகளுடன் இருந்தார். இரவு 8.30 மணி அளவில் யுவராணி தனது மகனிடம் நாளை காலை உனது தந்தையிடம் சொல்லிவிட்டு உன்னை பள்ளி விடுதிக்கு அழைத்து செல்ல போகிறேன் என்று கூறியுள்ளார்.

    இதனால் அவரது மகன் யுவராணியிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்கினர். யுவராணி தனது மகளுடன் வீட்டில் உள்ள ஹாலில் படுத்து தூங்கினார். அவரது மகன் வீட்டில் உள்ள படுக்கை அறையில் படுத்து தூங்கினார்.

    தாய் மீது கோபத்தில் இருந்த மகன் விடிந்ததும் தன்னை மீண்டும் பள்ளி விடுதியில் சேர்த்து விடுவார்கள் என ஆத்திரம் அடைந்தார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் நள்ளிரவு 12 மணி அளவில் எழுந்து தாய் படுத்திருந்த ஹாலுக்கு சென்றார்.

    அப்போது யுவராணி படுத்திருந்த இடத்தின் அருகே ஹலோ பிளாக் கல் மேல் ஒரு பூந்தொட்டி இருந்தது. ஆத்திரமடைந்த அவரது மகன் பூந்தொட்டியை எடுத்து முதலில் யுவராணி தலையில் அடித்துள்ளார். எனினும் ஆத்திரம் அடங்காததால் அருகில் இருந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து யுவராணி தலையில் அடித்துள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த யுவராணி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகே படுத்திருந்த அவரது மகள் எழுந்து பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அப்போது யுவராணியின் மகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    சத்தம் கேட்டு கீழ் வீட்டில் இருந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது யுவராணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தனர்.

    பின்னர் யுவராணியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே யுவராணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் டி.எஸ்.பி.சந்திரசேகர், புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் யுவராணி வீட்டுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    இதுகுறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய யுவராணியின் மகன் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×