search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை அருகே போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை: முழு விவரம்...

    • பார்த்திபன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாக இருந்தனர்.
    • ரவுடிகள் சுட்டதில் போலீஸ்காரர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராஜேஷ், லிவி பிரபு ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது.

    பொன்னேரி:

    சென்னை செங்குன்றம் அருகேயுள்ள பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். அ.தி.மு.க பிரமுகரான இவர் ஏற்கனவே பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார்.

    இவர் கடந்த ஆகஸ்டு மாதம் பாடியநல்லூர் அங்காளம்மன் கோவில் திடல் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை கொலை செய்தது.

    இந்த திடல் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்காளம்மன் கோவிலும் அந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பகுதியில் பார்த்திபன் கொலை செய்யப்பட்டதால் அந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கொலை தொடர்பாக செங்குன்றம் போலீசார் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

    பார்த்திபன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாக இருந்தனர். இவர்களில் முத்து சரவணன் செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்தவர். சண்டே சதீஷ் செங்குன்றம் ஞாயிறு கிராமத்தை சேர்ந்தவர்.

    பார்த்திபன் கொலை தொடர்பாக அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர்.

    மேலும் தலைமறைவாக இருந்தபடி அவர்கள் பலரை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கொலை தொடர்பாக செங்குன்றம் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், செங்குன்றம் துணை கமிஷனர் பால கிருஷ்ணன் ஆகியோரின் மேற்பார்வையில் போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் முத்து சரவணன், சண்டே சதீஷ் இருவரும் மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் மீஞ்சூர் சுங்கச்சாவடி அருகே மாரம்பேடு கண்டிகை கும்மனூர் வயல்வெளி பகுதியில் பதுங்கி இருந்தனர். இது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி கமிஷனர் ஜவஹர், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீஸ்காரர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், லிவி பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    ரவுடிகள் பதுங்கி இருந்த இடத்தை அடைந்த போலீசார், ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் இருவரிடமும் உங்களை கைது செய்ய வந்திருக்கிறோம், வெளியில் வாருங்கள் என்று எச்சரித்தனர். ஆனால் அதை மீறி ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் இருவரும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

    ரவுடிகள் சுட்டதில் போலீஸ்காரர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராஜேஷ், லிவி பிரபு ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது. இதனால் போலீசார் தங்களை தற்காத்துக்கொள்வதற்காக பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் 3 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டார். அந்த 3 குண்டுகளும் ரவுடி முத்து சரவனன் மீது பாய்ந்தது. இதில் அவருக்கு 3 இடங்களில் குண்டு காயம் ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அசோக் சுட்டதில் ரவுடி சண்டே சதீஷ் மீது குண்டு பாய்ந்தது.

    இதில் 2 ரவுடிகளும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்ப முயன்றதால் அதிரடியாக போலீசார் அவர்களை சுட்டு வீழ்த்தினார்கள்.

    இந்த நிலையில் ரவுடிகள் சுட்டதில் காயம் அடைந்த 3 போலீஸ்காரர்களையும், போலீசார் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    என்கவுண்டரில் பலியான ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகியோரின் உடல்களும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

    என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இருவர் மீதும் தனித்தனியாக 25 வழக்குகள் உள்ளன. இதில் 6 கொலை வழக்குகளும் அடங்கும்.

    இவர்கள் செங்குன்றம், பாடியநல்லூர், சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக செய்து வந்தனர். பார்த்திபனிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணம் கொடுக்காததால் தான் அவரை கொலை செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 2 ரவுடிகளும் போலீஸ் என்கவுண்டருக்கு பலியாகி உள்ளனர்.

    Next Story
    ×