search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலையொட்டி சிறப்பு ரெயில் இயக்கப்படுமா?
    X

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலையொட்டி சிறப்பு ரெயில் இயக்கப்படுமா?

    • சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களை உடனடியாக அறிவித்து இயக்க வேண்டும்.
    • தீபாவளிக்கு இயக்கப்பட்ட ரெயில்களின் வருமானத்தை பொறுத்தவரை, இரு மார்க்கங்களிலும் சேர்த்து ரூ.2.96 கோடி கிடைத்துள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயால் தீபாவளிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களுக்கான வருமானம் குறித்து தெற்கு ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான பாண்டியராஜா தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு தெற்கு ரெயில்வே வணிகதுறை அதிகாரி ரவீந்திரன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளிக்காக அக்டோபர் 18-ல் இருந்து நவம்பர் 3 வரை மொத்தம் 34 ரெயில்கள் இயக்கப்பட்டதில், 19 ரெயில்கள் தெற்கு ரெயில்வே மூலமாகவும், 15 மற்ற மண்டலங்கள் மூலமாக தெற்கு ரெயில்வே எல்லைக்குள் இயக்கப்பட் டது என்று குறிப்பிட்டுள்ளார்.

    இவ்வாறு இயக்கப்பட்ட ரெயில்களில் பெரும்பாலான ரெயில்கள் தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, கொச்சுவேலி மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது.

    மற்ற ரெயில்வே மண்டலங்கள் சார்பாக திருநெல்வேலி, நாகர்கோவில், கண்ணூர் ஆகிய ஊர்களில் இருந்து இருந்து பெங்களூருக்கும், தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கும், தீபாவளி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

    திருநெல்வேலி, எர்ணாகுளம், மங்களூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலிருந்து வட மாநில நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இயக்கப்பட்ட ரெயில்களின் வருமானத்தை பொறுத்தவரை, இரு மார்க்கங்களிலும் சேர்த்து ரூ.2.96 கோடி கிடைத்துள்ளது.

    தாம்பரம் - திருநெல்வேலி ரூ.22.43 லட்சமும், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ரூ.22.3 லட்சமும், தாம்பரம் - நாகர்கோவில் ரூ.18.2 லட்சமும், கொச்சுவேலி - தாம்பரம் ரூ. 17.71 லட்சமும் வழி நாகர்கோவில், எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் ரூ.17.01 லட்சமும், தாம்பரம் - திருநெல்வேலி ரூ.11.56 லட்சமும், சென்னை - ராமேஸ்வரம் ரூ.11.29 லட்சமும், திருச்சி - தாம்பரம் ரூ.2.62 லட்சம் மற்றும் ஒரு மார்க்கத்தில் நாகர்கோவில் - பெங்களூரு ரூ.9 லட்சமும், திருநெல்வேலி - தானாப்பூர் ரூ.53.8 லட்சமும் (இரு சேவைகள்) வருமானமாக கிடைத்துள்ளது.

    இது தவிர மற்ற மண்டலங்கள் மூலம் இயக்கப்பட்ட ரெயில்கள் மூலம் ரூ.1 கோடி வருமானமாக கிடைத்துள்ளது. அனைத்து ரெயில்களையும் சேர்த்து மொத்த வருமானமாக ரெயில்வே துறைக்கு ரூ.2.96 கோடி வசூலாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இது குறித்து பயணிகள் கூறியதாவது: கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை மாதங்களாக விளங்கும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் முழுவதும் சிறப்பு ரெயில்கள் இயக்கினால் தெற்கு ரெயில்வேக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    சிறப்பு ரெயில்கள் அனைத்தும் பல்வேறு ரெயில் நிலையங்களில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரெயில்களை கொண்டு இயக்கப்பட்டது. கிறிஸ்துமஸ், புதுவருட பிறப்பு, பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    தற்போது இயங்கும் ரெயில்களில் முன்பதிவு இல்லாத காரணத்தால் பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்தும் வருகின்றனர்.

    ரெயில்வே துறை பண்டிகை கால சிறப்பு ரெயில்களை பண்டிகைகளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே அறிவித்தால் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ரெயில்வே துறை கடைசி நேரத்தில் சிறப்பு ரெயில்களை அறிவித்து இயக்கும் போது ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் அந்த டிக்கெட்டை ரத்து செய்து விட்டு ரெயில்களில் பயணம் செய்ய விரும்பமாட்டார்கள்.

    ஆகவே பண்டிகை காலங்களில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சிறப்பு ரெயில்களை அறிவித்து இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே ரெயில்வேயின் வருமானத்தையும், பயணிகளின் தேவையையும் கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே நாகர்கோவில், தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களை உடனடியாக அறிவித்து இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×