search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காயல்பட்டினத்தில் மழை வெள்ள பாதிப்பு: மீட்பு பணிகளுக்காக சிறப்பு அதிகாரி நியமனம்
    X

    காயல்பட்டினம் பொதுநல குழுவினர் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவை சந்தித்து மனு அளிக்க வந்த காட்சி.

    காயல்பட்டினத்தில் மழை வெள்ள பாதிப்பு: மீட்பு பணிகளுக்காக சிறப்பு அதிகாரி நியமனம்

    • வீடுகளுக்குள்ளும், சுற்றுப்புறத்திலும் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும்.
    • மழை வெள்ள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கான்கிரீட் வீடுகளை அமைத்து தர வேண்டும்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதிலும் காயல்பட்டினம் முழுவதுமாக பாதிக்கப்பட்டு தனித்தீவாக காட்சியளிக்கிறது.

    இது சம்பந்தமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகம்மது அபூபக்கர் தலைமையில் மாநில செயலாளர் காயல் மகபூப், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை செயலாளர் நவாஸ் அகமது, மில்லி கவுன்சில் நிர்வாகி இபுனு சவூது ஆகியோர் தமிழக அரசின் தலைமைச் செயலாளரான சிவ்தாஸ் மீனா, முதல்-அமைச்சரின் செயலாளர் முருகானந்தன் ஆகியோரை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    காயல்பட்டினம் நகர் முழுவதுமே வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வரும் நிலையில் பொதுநல அமைப்புகளின் மூலம் இயன்ற அளவு மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியையும் செய்து அரசு சார்பில் போர்க்கால அடிப்படையிலான மீட்பு பணிகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இதன்படி நகரில் உடனடியாக மின்விநியோகத்தை வழங்கவும், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவையை தொடர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் வீடுகளுக்குள்ளும், சுற்றுப்புறத்திலும் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண தொகையை வழங்கவும், ஆவின் பால் தடையின்றி கிடைக்கவும், ஆண்டுதோறும் நிகழும் மழை வெள்ள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கான்கிரீட் வீடுகளை அமைத்து தர வேண்டும். கிடப்பில் உள்ள மழை நீர் வடிகால் திட்டத்திற்கு உடனடியாக செயல் வடிவம் கொடுக்கவும், சிறிய அளவு மழை பெய்தால் கூட வரண்டியவேல் விலக்கு அருகில் உள்ள பாலம் தண்ணீரால் மூழ்கடிக்கப்பட்டு தூத்துக்குடி-திருச்செந்தூர் இடையே போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டு விடுவதால் குறிப்பிட்ட அந்த பாலத்தை உயர்த்தி அமைக்கும் பணியை உடனே மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து காயல்பட்டினத்திற்கு ஆவின் பால் விநியோகத்தை தொடரவும், உப மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதை விரைந்து சீரமைக்கவும், காயல்பட்டினத்தில் மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளை விரைந்து செயல்படுத்த சிறப்பு அதிகாரியை நியமித்தும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடனடியாக உத்தரவிட்டார்.

    Next Story
    ×