search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உயர்த்தப்பட்ட பல்வேறு பதிவு கட்டணங்களின் உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- கட்டுனர் சங்கம் வலியுறுத்தல்
    X

    உயர்த்தப்பட்ட பல்வேறு பதிவு கட்டணங்களின் உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- கட்டுனர் சங்கம் வலியுறுத்தல்

    • காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அரசுக்கும், கட்டுமான துறைக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
    • பதிவு கட்டண மற்றும் சேவை கட்டண உயர்வுகளால் சிறிய மற்றும் நடுத்தர வகுப்பினரின் வீடு வாங்கும் கனவு பாதிக்கப்படும்.

    சென்னை:

    சிங்கார சென்னை கட்டுனர் சங்க தலைவர் அனிபா, செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சமீபத்திய பதிவு கட்டணம் மற்றும் சேவை கட்டண உயர்வு சம்பந்தமாக அனைத்து கட்டுனர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று எங்களது குறைகளை பரிவுடன் கேட்டு நிவர்த்தி செய்வதாக வாக்களித்த பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கும் அதில் கலந்து கொண்ட பதிவுத்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் உயர்த்தப்பட்ட பல்வேறு சேவைகளின் பதிவு கட்டணங்களின் அதீத உயர்வை மறு மதிப்பாய்வு செய்வது சம்பந்தமாக உடனடி தீர்வு காணும்படி அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அரசுக்கும், கட்டுமான துறைக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    சிறிய மற்றும் நடுத்தர கட்டுமான தொழில் புரியும் கட்டுனர்களுக்கு பெரிதும் பொருளாதார உதவியாக இருப்பது "இன்வெஸ்டர்ஸ் " எனப்படும் முதலீட்டாளர்கள். அவர்கள் கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்து கட்டுமானம் நிறைவு பெறும்போது அதை மீண்டும் மறு விற்பனை செய்து தங்களது லாபத்தை எடுத்து கொள்வார்கள். இத்தகைய முதலீட்டாளர்களால் அரசுக்கு ஒரே சொத்துக்கு இரண்டு முறை வருவாய் வரக்கூ டிய வாய்ப்பாய் அமைகிறது. அத்தகைய முதலீடுகள் இத்தகைய பதிவு கட்டண மற்றும் சேவை கட்டண உயர்வுகளால், சொத்து பரிவர்த்தனைகளுக்கான செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

    இதன் விளைவாக, செலவினங்கள் குறைவாக உள்ள மற்றும் லாபம் அதிகம் உள்ள அண்டை மாநிலங்களில்மு தலீட்டாளர்கள் முதலீடு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பதிவு கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி போன்ற வருமானங்களில் பெருமளவு பாதிப்பு ஏற்படும். இத்தகைய நிகழ்வுகள் பொருளாதார முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்வினையாக அமையும். பதிவு கட்டண மற்றும் சேவை கட்டண உயர்வுகளால் சிறிய மற்றும் நடுத்தர வகுப்பினரின் வீடு வாங்கும் கனவு பாதிக்கப்படும்.

    முன்பு பவர் ஆப் அட்டர்னி பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இப்போது பத்திரப்பதிவு துறையால் அரசாணை எண். 1337 படி சொத்தின் சந்தை மதிப்பில் 1 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை நிலவரங்கள் மற்றும் நியாயமான மதிப்பீட்டிற்கு ஏற்ப கட்டணத்தை ரூ. 20,000, ரூ. 25,000 ஆக மாற்றுவதை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பத்திரப்பதிவு துறையால் அரசாணை எண். 1337 படி கட்டுமான ஒப்பந்தங்களுக்கான பதிவுக் கட்டணத்தை 1 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தியதை மறு ஆய்வு செய்ய வேண்டும். கட்டணத்தை அதன் முந்தைய விகிதத்தில் வைத்திருப்பதற்கான சாத்தியத்தை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    பெரு முதலாளிகளை மட்டுமே மனதில் வைத்து சீர்திருத்தப்படும் சட்டங்களால் குறுந்தொழில்கள் பாதிப்படைந்து நலிவடைந்து மறைந்து வருகிறது. உதாரணத்திற்கு தெருவுக்கு தெரு இருந்த மிதிவண்டி சீர்திருத்த கடைகள், நூலகங்கள், முடி திருத்தும் நிலையங்கள், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பெட்டிக்கடைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. இதனால் பாமர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்புகளால் சிறு குறு தொழில்கள் பெரும் பண முதலாளிகளின் கைக்கு சென்று விடுகிறது. சுய தொழில் செய்து சுயமரியாதையுடன் வாழ நினைக்கும் தமிழர்கள் பெரு முதலாளிகளின் வேலையை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சீர்திருத்தம் மற்றும் மாற்றம் என்பது காலத்துக்கு ஏற்ப தேவையான ஒன்றுதான். ஆனால் அத்தகைய மாற்றங்களை மறுசீரமைக்கும் போது தமிழர்களின் பொருளாதார மரபு சார்ந்த வாழ்க்கை நெறிமுறை பாதிப்படைய செய்யும் வகையில் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே இது சம்பந்தமாக அரசு கவனத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாத வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது தமிழக அரசுக்கு மேலும் வலு சேர்க்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×