search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

    • சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
    • கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைத்து முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஆறாவது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது.

    ஆசிரியர்கள் உணவருந்தாமல், தண்ணீர் மட்டுமே குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பள்ளிக்கல்வி துறை செயலாளர் மற்றும் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைத்து முதல் அமைசர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளரின் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது." என கூறப்பட்டுள்ளது.

    முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆசிரியர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

    கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். விரைவில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர்கள், போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×