என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரம் அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
- மாமல்லபுரத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,054 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது.
- இரண்டு நாட்களாக நடந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையில் ரூ.20 கோடி மதிப்பிலான சுமார் 3 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,054 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. நெம்மேலி, பட்டிபுலம், சூலேரிக்காடு, சாலவாக்கம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள இடங்களை தனியார் ஓட்டல்கள், கோவில், வீடு, வீட்டுமனை என பலர் ஆக்ரமித்து பயன்படுத்தி, வந்தனர்.
இந்த நிலையில் இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்ரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து காஞ்சிபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி உத்தரவின் பெயரில், உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருடன் இணைந்து ஆக்ரமிப்பு கட்டிடங்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.இரண்டு நாட்களாக நடந்த இந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையில் ரூ.20 கோடி மதிப்பிலான சுமார் 3 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.






