search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    32 பேர் சிறைபிடிப்பை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்
    X

    ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளதை காணலாம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    32 பேர் சிறைபிடிப்பை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

    • படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து வருகிறார்கள். மேலும் நமது மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யும் படகுகளையும் அந்நாடு அரசுடமையாக்கி வருவதால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

    கச்சத்தீவு மீட்கப்பட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனை தீரும் என்பதால் மத்திய அரசை தமிழக அரசும், மீனவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மீனவர்கள் சிறைபிடிக்கப்படும்போது எழும் கோரிக்கைகளும், கோஷங்களும் பின்னர் பேசப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்கள் மற்றும் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இதில், படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்தும், சிறையில் உள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் இன்று யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனைதொடர்ந்து, ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு, ஏப்ரல் 8-ந்தேதி ஆதார் அட்டை, மீனவர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மீனவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    இந்த போராட்டம் காரணமாக மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்து பிழைப்பு நடத்துபவர்கள் என சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் தினந்தோறும் நடைபெறும் கோடிக்கணக்கான அளவிலான மீன்பிடி தொழில் வர்த்தகமும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த மாதம் இதேபோல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள், உண்ணாவிரதமும் இருந்தனர். மேலும் ராமேசுவரத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு நடைபயணமும் மேற்கொண்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர் மற்றும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்தநிலையில் மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பல்வேறு இன்னலுக்கு ஆளாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×