search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் பண்டிகையையொட்டி ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கப்பணம்- அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது
    X

    பொங்கல் பண்டிகையையொட்டி ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கப்பணம்- அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது

    • ரேசன் கடைகளில் ஆதாரை இணைக்காத கார்டுதாரரை கண்டறிந்து விண்ணப்பம் கொடுத்து ஆதாரை இணைக்க சொல்லி வருகின்றனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கடைகளில் ரொக்கப்பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது.

    கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டது.

    இந்த பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. பல ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட வெல்லம் மோசமாக இருந்ததாக எதிர்க்கட்சியினர் அரசு மீது குறை கூறினார்கள். மற்ற பொருட்களின் எடையும் குறைவாக இருந்ததாக விமர்சனம் வைக்கப்பட்டது.

    இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசியுடன் சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், ஆவின் நெய் ஆகியவை வழங்கலாமா? என்றும் ஆலோசிக்கப்படுகிறது.

    பணமாக கொடுக்கும் பட்சத்தில் ரூ.1000 ரொக்கப்பணத்தை ரேசன் கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கு மூலம் வழங்கினால் எளிதாக இருக்கும் என்று நிதித்துறை கருத்து தெரிவித்து இருந்தது.

    ஆனால் ரூ.2 கோடியே 23 லட்சம் ரேசன் கார்டுகளில் 14 லட்சத்து 86 ஆயிரத்து 582 கார்டுக்கு வங்கி கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தது. இதை பூர்த்தி செய்தால் தான் வங்கிக் கணக்கு மூலம் பணம் போட முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

    இதனால்தான் கூட்டுறவு துறை வெளியிட்ட அறிவிப்பில் ரேசன் கார்டுதாரர்களுக்கு வங்கிக்கணக்கு இருந்தால் அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கூறி இருந்தது. ஆனாலும் இன்னும் அந்தப் பணி முழுமையாக முடிவடையவில்லை.

    ரேசன் கடைகளில் ஆதாரை இணைக்காத கார்டுதாரரை கண்டறிந்து விண்ணப்பம் கொடுத்து ஆதாரை இணைக்க சொல்லி வருகின்றனர்.

    இந்த பணிகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ரூ.1000 ரொக்கப்பணத்தை ரேசன் கடை மூலம் பொதுமக்களுக்கு கையில் நேரில் கொடுப்பதுதான் சிறந்தது என்று அதிகாரிகள் தரப்பில் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.

    ரேசன் கடைகளின் மூலமாக ரொக்கப் பணத்தை கொடுப்பதின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் அதை அருகே இருந்து கவனித்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது.

    எனவே அதன் அடிப்படையில் பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என தெரிகிறது. அது மட்டுமின்றி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வாய்ப்பில்லை என தெரிகிறது.

    ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசின் சார்பில் இன்னும் வெளியாகவில்லை.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதுபற்றி முடிவு செய்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அனேகமாக அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×