என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடு: அனைத்து கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை
- கூட்டத்தில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
- கள்ள ஓட்டுகளை முற்றிலும் தடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.
சென்னை:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
1.1.2024 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி நாளை மறுநாள் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட உள்ளார். இதில் தேவையான திருத்தங்கள் செய்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படும்.
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தை இன்று கூட்டி இருந்தார்.
இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, தாயகம் கவி எம்.எல்.ஏ. பங்கேற்றனர். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வக்கீல் இன்பதுரை கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் நவாஸ், சந்திர மோகன், பா.ஜனதா சார்பில் கராத்தே தியாகராஜன், சவுந்தரராஜன் பங்கேற்றனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ஆறுமுக நயினார், சுந்தர்ராஜன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் டாக்டர் ரவீந்திரநாத், வீரபாண்டியன், தே.மு.தி.க. சார்பில் துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, தேசிய மக்கள் கட்சி சார்பில் சீனிவாசன், ரமேஷ், ஆம்ஆத்மி சார்பில் ஸ்டெல்லா மேரி, பாரூக், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தலைமை தேர்தல் அதிகாரியிடம் எடுத்து கூறினார்கள்.
கள்ள ஓட்டுகளை முற்றிலும் தடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, போலி வாக்காளர் பெயர்களை கண்டறிந்து நீக்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன் வைத்தனர்.
இந்த கருத்துக்களை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கேட்டுக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.






