என் மலர்
தமிழ்நாடு

"நீட்" தேர்வு தேதியை அறிவித்தது தேசிய தேர்வு முகமை
- நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
- உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான ஜே.இ.இ. முதல் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.
சென்னை:
இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
கடந்த 2 வருடமாக நீட் தேர்வு தாமதமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வருடம் மே மாதம் நீட் தேர்வு நடத்தப்பட்டு நாடு முழுவதும் 18 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
தமிழகத்திலும் 1 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் 2024-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மே மாதம் 5-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை இதனை இன்று அறிவித்துள்ளது.
இதே போல உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான ஜே.இ.இ. முதல் தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஜே.இ.இ. முதல் தேர்வு ஜனவரி மாதம் 24-ந்தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது.
ஜே.இ.இ. 2-ம் தேர்வு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.