search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
    X

    அமைச்சர் பொன்முடி

    என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

    • நாளை நடைபெற இருந்த என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது.
    • நீட் தேர்வு முடிவு வந்த பிறகு 2 நாட்கள் கழித்து பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும்.

    சென்னை:

    பி.இ. படிப்பில் சேருவதற்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங் நாளை (25-ந்தேதி) தொடங்கி அக்டோபர் 21-ந்தேதி முடிவடையும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    ஆனால் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளி வராததால் என்ஜினீயரிங் கவுன்சிலிங் நாளை 25-ந்தேதி தொடங்குமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஏன் என்றால் நீட் தேர்வு எழுதி இருக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர இடம் கிடைக்கும்பட்சத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேராமல் மருத்துவ படிப்புக்கு சென்று விடுவார்கள்.

    இதனால் என்ஜினீயரிங் கல்லூரிகளில் நிறைய காலி இடங்கள் ஏற்பட்டு விடும். இப்படித்தான் கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் 631 இடங்கள் காலியாக இருந்தன. இதை தவிர்ப்பதற்காகத்தான் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் இடம் கிடைத்த 7 நாட்களுக்குள் மாணவர்கள் சேர வேண்டும். இல்லையென்றால் அந்த இடம் காலியாக இருப்பதாக கருதப்பட்டு வேறு ஒருவருக்கு கொடுக்கப்படும் என்று புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 21-ந்தேதி வெளியாகும் என்பதை கருத்தில் கொண்டு என்ஜினீயரிங் கவுன்சிலிங் 25-ந்தேதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இப்போது நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 28-ந்தேதிக்கு தள்ளிப்போவதால் தமிழகத்தில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் திட்டமிட்டபடி 25-ந்தேதி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்ஜினீயரிங் படிப்பு சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால் இன்னும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

    அந்த தேர்வு முடிவுகளை பொறுத்துதான் பி.இ. என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வை நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே நாளை நடைபெற இருந்த என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது.

    நீட் தேர்வு முடிவு வந்த பிறகு 2 நாட்கள் கழித்து பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

    முன்னதாக என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை 1 வாரம் தள்ளி வைக்கலாமா? என்று உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். இதற்கு முன்பு ஏற்கனவே ஆகஸ்டு 20-ந்தேதி கவுன்சிலிங் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் 25-ந்தேதிக்கு அதை தள்ளி வைத்தனர். இப்போது நீட் தேர்வு முடிவு வெளியாகாததால் இன்னும் 1 வாரம் வரை தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

    Next Story
    ×