search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடங்கியது- மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
    X

    பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடங்கியது- மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

    • மதுரையில் 900 பால் வினியோக சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • உசிலம்பட்டி பகுதியில் சுமார் 40 சதவீதம் பால் உற்பத்தியாளர்கள் மதுரை ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மேலமடையில் ஆவின் பால் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாவட்டம் முழுவதிலும் உள்ள விவசாயிகளிடம், பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 வீதம் உயர்த்த வேண்டும் என்று மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பான் மைய சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை.

    இதைத்தொடர்ந்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, மதுரை மாவட்டம் முழுவதிலும் கடந்த 11-ந்தேதி ஆவினுக்கு பால் வினியோகத்தை நிறுத்தும் போராட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது விரைவில் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்று உறுதியளித்தனர். அதனை ஏற்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்தநிலையில் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் வருகிற 17-ந் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்தனர்.

    இதற்கிடையே பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிர்வாகிகளுடன் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து குறிப்பிட்டபடி மதுரை மாவட்டத்தில் இன்று (17-ந்தேதி) ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகத்தை நிறுத்தம் போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதன் காரணமாக மதுரை மாவட்டம் முழுவதும் ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பால் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பால் பணியாளர் சங்கம் கலந்து கொள்ளவில்லை.

    மதுரையில் 900 பால் வினியோக சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் அங்கத்தினராக உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த பால் தேவை 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டராக உள்ளது. ஆனால் ஆவின் நிறுவனத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 1.60 லட்சம் லிட்டர் என்ற அளவில் பால் கிடைத்து வந்தது. அதுவும் இப்போது படிப்படியாக குறைந்து தற்போது 1.36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்டம் முழுவதிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு உற்பத்தியா ளர்கள் நலச்சங்கம் முழு அளவில் பால் விநியோக நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால், ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக சங்கங்களின் கோரிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது. எனவே பால் வியாபாரிகள், ஆவினுக்கான பால் விநியோகத்தை நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினால் கூட்டுறவு சங்க விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் பால் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தவிர மதுரையில் உற்பத்தியாளர்களிடம் பேசுவதற்காக, ஆவின் சார்பில் பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் உசிலம்பட்டி, செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பாக உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியங்களில் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் சங்க பணியாளர்கள், உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கமாவட்டத்தலைவர் பெரிய கருப்பன், செயலாளர் உக்கிரபாண்டி, பொருளாளர் இன்பம் ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

    உசிலம்பட்டி பகுதியில் சுமார் 40 சதவீதம் பால் உற்பத்தியாளர்கள் மதுரை ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×