search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உசிலம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்
    X

    தொட்டப்பநாயக்கனூரில் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காணலாம்.

    உசிலம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்

    • தொட்டப்ப நாயக்கனூர் விலக்கில் தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பால் உற்பத்தியாளர்கள், தங்கள் வளர்க்கும் கறவை மாடுகளுடன் வந்து கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி:

    பால் கொள்முதல் விலையை ரூ.31-ல் இருந்து 40 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் கடந்த 11-ந்தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்திலும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்புவதை நிறுத்தி தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். மேலும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.

    கடந்த வாரம் உசிலம்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி மற்றும் சர்க்கரைப்பட்டி பகுதிகளை சேர்ந்த பால் உற்பத்தியாளர் நல சங்கத்தினர் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம், மதிப்பனூரை சேர்ந்த பால் உற்பத்தியாளர்களும் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள், பால் விலையை உயர்த்த வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் தொட்டப்ப நாயக்கனூர் விலக்கில் தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது நடுரோட்டில் பாலை கொட்டி தங்களின் எதிர்ப்பை காட்டினர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வெண்மணி சந்திரன், செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் சாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.

    இதில் தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பால் உற்பத்தியாளர்கள், தங்கள் வளர்க்கும் கறவை மாடுகளுடன் வந்து கலந்து கொண்டனர். மேலும் அந்த கிராமத்தின் பால்பண்ணை தலைவர்கள் சண்முகம், ஞானபிரகாசம், தமிழ், பாண்டி, சின்னச்சாமி, முருகன், விக்கி, அர்ஜுனன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால், ஆவின் பால் வினியோகம் பாதிக்கும் சூழல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

    ஆகவே பால் கொள்முதல் விலையை உயர்த்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தங்களின் போராட்டம் தொடரும் எனவும் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    Next Story
    ×