search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: மருமகனை விருந்துக்கு அழைத்து சென்று காரில் இருந்து தள்ளிவிட்ட மாமனார்
    X

    எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: மருமகனை விருந்துக்கு அழைத்து சென்று காரில் இருந்து தள்ளிவிட்ட மாமனார்

    • காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது.
    • கோவையில் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    திருமங்கலம்:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரியவரதன் (வயது 22). இவரும், மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சாத்தங்குடியை சேர்ந்த ஜீவானந்தம் மகள் சினேகா (21) என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் பிள்ளைகளின் காதலை ஏற்க மறுத்து விட்டனர். பெற்றோர் சம்மதத்துடன் தங்கள் காதல் நிறைவேறாது என்று எண்ணிய காதல் ஜோடி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியது.

    பின்னர் அவர்கள் கோவையில் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அங்கேயே ஒரு வாடகை வீட்டில் தனிக்குடித்தனமும் வசித்து வந்தனர். சில மாதங்கள் கழித்து இரு வீட்டாருக்கும் இதுகுறித்து தெரியவந்தது. இந்த நிலையில் மகனை வீட்டிற்கு வருமாறு அவரது தந்தை மணி அழைத்தார்.

    ஒரு வழியாக தங்களது திருமணத்திற்கு சம்மதம் கிடைத்து விட்டதாக நினைத்த பிரியவரதன் மகிழ்ச்சி பெருக்கோடு தனது காதல் மனைவியுடன் வீட்டிற்கு வந்தார். அங்கு அவர்கள் 3 நாட்கள் தங்கி இருந்தனர். விருந்து, உபசரிப்பு என புதுமண ஜோடி திளைத்து போனார்கள்.

    அதே சமயம் அங்கு சினேகாவின் தந்தை ஜீவானந்தம், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் 2 பேரும் அங்கு வந்தனர். அப்போது அவர்களும் தங்கள் பங்கிற்கு மருமகனையும், மகளையும் தங்கள் ஊருக்கு விருந்துக்காக அழைத்து செல்ல விரும்புதாக மணியிடம் கூறி உள்ளனர்.

    அதற்கு சம்மதித்த மணி, மகன் பிரியவரதன், மருமகள் சினேகா ஆகியோருடன் தனது மனைவி சின்னம்மாளையும் அவர்களுடன் அனுப்பி வைத்தார். அவர்கள் காரில் சினேகாவின் சொந்த ஊரான சாத்தங்குடிக்கு புறப்பட்டனர்.

    மேலஉரப்பனூர் கண்மாய் அருகே சென்றபோது காரின் வேகத்தை குறைத்து, பிரியவரதன் அவரது தாய் சின்னம்மாள் ஆகிய இருவரையும், காரில் இருந்த சினேகாவின் தந்தை ஜீவானந்தம் மற்றும் அவரது உறவினர்கள், காரில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    அவர்கள் சுதாரிப்பதற்குள் அவர்களிடமிருந்து செல்போனையும் பறித்துக்கொண்டு சினேகாவை மட்டும் காரில் அழைத்து சென்றனர். இதையடுத்து கடத்தி செல்லப்பட்ட தனது மனைவியை மீட்டு தருமாறு திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பிரியவரதன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×