search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காதலிப்பதாக கூறி சிறுமியுடன் 3 மாநிலங்களில் சுற்றி திரிந்த கூலித்தொழிலாளி
    X

    காதலிப்பதாக கூறி சிறுமியுடன் 3 மாநிலங்களில் சுற்றி திரிந்த கூலித்தொழிலாளி

    • மேட்டுப்பாளையம் போலீசில் மகளை கண்டுபிடித்து தரும்படி பெற்றோர் புகார் அளித்தனர்.
    • விக்னேஷ், சிறுமியிடம் வெளியில் செல்லலாம் என்று கூறி வீட்டை விட்டு அழைத்து சென்றுள்ளார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

    மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது24). கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லும் சமயங்களில் பஸ் நிலையத்தில் வைத்து சிறுமியை பார்த்ததாக தெரிகிறது.

    அடிக்கடி பார்த்ததால், சிறுமியுடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார். அதனை தொடர்ந்து அவருடன் நட்பாக பழகி வந்தார். ஒரு நாள், சிறுமியிடம், காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் சிறுமி எதுவும் கூறவில்லை. இருந்தபோதிலும் அவர் சிறுமியிடம் காதலிக்க கூறி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று, விக்னேஷ் சிறுமியை சந்தித்து நான் உன்னை காதலிக்கிறேன். நாம் எங்காவது சென்று விடலாம் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

    அதன்படி கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி பள்ளி செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர்கள் மேட்டுப்பாளையம் போலீசில் மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர்.

    போலீசார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிறுமியை கண்டுபிடிப்பதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை, விக்னேஷ் காதலிப்பதாக கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

    ஆனால் அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பது தெரியாமல் இருந்தது.

    விக்னேஷின் செல்போன் எண்ணை வைத்து, தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னல் ஒவ்வொரு நேரமும் பல்வேறு இடங்களை காட்டியதால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் விக்னேஷ் சிறுமியுடன், திருப்பூரில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த விக்னேஷ் மற்றும் சிறுமியை மீட்டனர்.

    பின்னர் அவர்களை மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    அப்போது, விக்னேஷ் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை சிறுமியும் நம்பியுள்ளார்.

    இதை தனக்கு சாதமாக பயன்படுத்தி, விக்னேஷ், சிறுமியிடம் வெளியில் செல்லலாம் என்று கூறி வீட்டை விட்டு அழைத்து சென்றுள்ளார்.

    அவர் ஒரே இடத்தில் இருக்காமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களுக்கு சிறுமியை அழைத்து சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    மேலும் சிறுமியை மீட்டு, அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×