search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிருஷ்ணா தண்ணீர் திறப்பை உடனே நிறுத்த வேண்டும்- தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை
    X

    கிருஷ்ணா தண்ணீர் திறப்பை உடனே நிறுத்த வேண்டும்- தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை

    • புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்தும் குறைந்த அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23 அடியை நெருங்கி உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளில் மொத்தம் 11. 757 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    இதில் பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி நவம்பர் 28-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வந்தது. இதனிடையே வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதனால் குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.

    இதேபோல் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்தும் குறைந்த அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    தற்போது மழை இல்லாததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. கிருஷ்ணா தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் பூண்டி ஏரி அதன் முழு கொள்ளவான 35 அடி முழுவதும் நிரம்பி உள்ளது.

    ஏரியில் முழுகொள்ளளவான 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 480 கன அடி வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியில் மேலும் தண்ணீரை சேமித்து வைக்க முடியாது என்பதால் ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 550 கன அடி வீதம், மதகுகள் வழியாகவும், கொசஸ்தலை ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 200 கன அடியும் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23 அடியை நெருங்கி உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் தற்போது 22.80 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    இதேபோல் புழல் ஏரியின் நீர்மட்டமும் மொத்த உயரமான 21 அடியில் 19.80 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளிலும் வரும் நாட்களில் பூண்டி ஏரியில் இருந்து அனுப்பப்படும் தண்ணீரை சேமித்து வைக்கமுடியாத நிலை உள்ளது. இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டு உள்ள கிருஷ்ணா தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். எனவே பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு விரைவில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளிலும் தற்போது மொத்த கொள்ளளவில் 92 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டு சென்னையில் தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்யமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×