search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லைக்கு வந்தது- சென்னையின் குடிநீர் தேவைக்காக 2 டி.எம்.சி. கிடைக்க வாய்ப்பு
    X

    கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லைக்கு வந்தது- சென்னையின் குடிநீர் தேவைக்காக 2 டி.எம்.சி. கிடைக்க வாய்ப்பு

    • கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெறவில்லை.
    • கிருஷ்ணா நதி கால்வாய் தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்கிறது.

    ஊத்துக்கோட்டை:

    பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.507 டி.எம்.சி. ஆகும். இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடப்படுவது வழக்கம்.

    இத்திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம்தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெறவில்லை. இந்த நிலையில் தற்போது வாட்டி எடுத்து வரும் கோடை வெயில் காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்ட வேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திர அரசை கேட்டுக்கொண்டது.

    அதன்பேரில் கடந்த 1-ந்தேதி கண்டலேறு பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து 3-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வந்தடைந்தது. வினாடிக்கு 20 கன அடி வீதம் வந்து கொண்டு இருந்தது.

    கிருஷ்ணா நதி கால்வாய் தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்கிறது. கடந்த காலங்களில் பலத்த மழைக்கு ஜீரோ பாயிண்டில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் கரைகள் சேதம் அடைந்தன. இந்தக் கரைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரிக்கு அனுப்பி வைத்தால் கரைகள் சீரமைப்பு பணிகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நீரை ஊத்துக்கோட்டை அருகே ஜங்காளபள்ளியில் உள்ள மதகுகள் வழியாக கண்ணன் கோட்டை நீர்த்தேக்கத்திற்கு திருப்பி விடப்பட்டது.

    இதனால் கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்து நேற்று முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியை எட்டியது. இதன் காரணமாக கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து ஜீரோ பாயிண்டில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை சென்னை பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 26.07 அடியாக பதிவாகியது. 999 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 170 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. சென்னையில் குடிநீர் தேவைக்காக 2 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×