search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கணியம்பாடி அருகே செங்கல் சூளையில் மூச்சு திணறி கணவன்-மனைவி பலி
    X

    கணியம்பாடி அருகே செங்கல் சூளையில் மூச்சு திணறி கணவன்-மனைவி பலி

    • நேற்று இரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைக்க தீ மூட்டப்பட்டது‌.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 40). இவரது மனைவி அமுல் (30). தம்பதியினருக்கு சந்தியா (16), சினேகா (14), அரவிந்த் (12) ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

    தெய்வசிகாமணியும், அவரது மனைவி அமுலுவும் அதே ஊரை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில், 15 ஆண்டுகள் வாடகை மூலம் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.

    தம்பதியினர் தினமும் பகல் முழுவதும் சூளையில் வேலை செய்துவிட்டு, இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று விடுவார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைக்க தீ மூட்டப்பட்டது. அப்போது தெய்வசிகாமணி மற்றும் அமுல் ஆகியோர் சூளைக்கு பக்கவாட்டில் இறக்கப்பட்டுள்ள தகர சீட் அருகே தங்கியுள்ளனர்.

    மேலும் செங்கல் சூளையில் மூட்டப்பட்ட தீ அணையாமல் இருக்க சூளையை சுற்றி தார்பாய் மூடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் விடியும் வரை கணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    தொடர்மழையின் காரணமாக சூளை மூடப்பட்டு இருந்த தீ அணைந்து புகை மண்டலம் சூழ்ந்தது.

    அப்போது கிளம்பிய புகை அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதிலும் குபீரென பரவியது. அப்போது தூக்கத்தில் இருந்த தெய்வசிகாமணி, அமுலு ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அலறி கூச்சலிட்டனர்.

    பலத்த மழை பெய்ததால், இவர்களது கூச்சல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில், இவர்களது பக்கத்து சூளை உரிமையாளர் சீனிவாசன், அந்த வழியாக சென்றபோது அமுலுவின் முனகல் சத்தம் கேட்டது.

    உடனே சீனிவாசன் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தெய்வசிகாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ஆபத்தான நிலையில் இருந்த அமுலுவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

    ஆனாலும் சிகிச்சை பலனின்றி அமுலுவும் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த, வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தாசில்தார் செந்தில், இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், வருவாய் ஆய்வாளர் சந்தியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×