search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமித் ஷா இன்று புதுக்கோட்டை வருகை- காலபைரவர் கோவிலில் சாமி தரிசனம்
    X

    அமித் ஷா இன்று புதுக்கோட்டை வருகை- காலபைரவர் கோவிலில் சாமி தரிசனம்

    • கோவில்கள் பல்வேறு அற்புதங்களையும், சுரங்கப் பாதைகளையும் கொண்டுள்ளன.
    • . கோவிலின் அருகே கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் சத்தியகிரீசுவரர் சிவாலயமும், சத்திய மூர்த்திப் பெருமாள் கோவிலும் மிகவும் புகழ் பெற்ற தலங்களாகும். இரண்டுமே பல்லவர் காலத்தில் மலையைக் குடைந்து பாறைகளைச் செதுக்கி குடைவரையாய் உருவாக்கப்பட்டவை. இந்த கோவில்கள் பல்வேறு அற்புதங்களையும், சுரங்கப் பாதைகளையும் கொண்டுள்ளன.

    உலகத்திலேயே இரண்டாவது பெரிய பள்ளி கொண்ட பெருமாளாக சத்திய மூர்த்தி பெருமாள் இங்கு தான் வீற்றிருக்கிறார். முகத்தை ஒரு சாளரம் வழியாகவும், பாதத்தை மற்றொரு சாளரம் வழியாகவும் காணும் அளவிற்கு நீளமான, ஒரே கல்லால், பாறையைக் குடைந்து உருவாக்கி உள்ளனர்.

    இந்த கோவிலின் அருகே கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். தமிழகத்திலே வடக்கு பார்த்தபடி தனி கோவில் கொண்ட பைரவர் தலம் இது ஒன்றே ஆகும். கோவில் அருகே பாம்பாறு செகிறது. பாம்பு போல வளைந்து, நெளிந்து காணப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. சகல தோஷ பரிகார தளமாகவும் இது விளங்குகிறது.

    கோட்டை பைரவர் கால பைரவ அம்சம் ஆவர். சிவபெருமான் பைரவ வடிவம் கொண்டதாக ஆகமங்கள் சொல்கின்றன. இந்த கோட்டை பைரவரிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும். ராமநாதபுரச் சீமையை ஆண்டகிழவன் சேதுபதியால் இங்குள்ள கோட்டை கட்டப்பட்ட போது கோட்டையின் தென்புற பிரதான வாயிலில் ஸ்ரீசக்தி விநாயகரும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதிகளும், கோட்டையின் வடபுற சுவற்றில் ஸ்ரீ கோட்டை பைரவர் கோவில் அமைக்கப்பட்டது.

    இக்கோவில் மத்திய தொல்லியல் ஆய்வித்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை திருக்கோவில்கள் நிர்வாக அதிகாரி, உதவி ஆணையராலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அஷ்டமச்சனி, ஏழரைச்சனி மற்றும் சகல சனி சம்பந்தப்பட்ட தோஷங்களும் இப்பைரவரைக்கு அபிஷேகம், வடமாலை, சந்தனகாப்பு செய்து நெய்தீபம், மிளகுதீபம் ஏற்றி வழிபட்டால் சனிதோஷம் விலகும்.

    பிதூர் தோஷங்களுக்கு பைரவருக்கு புனுகு சாற்றி, எழுமிச்சம் பழமாலை சூட்டி எள் சாத அபிஷேகம் செய்து வழிபட்டால் பிதூர் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமைகளில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி நெய்தீபம் ஏற்றி வந்தால் கல்வியில் மேன்மை பெறலாம்.

    பைரவருக்கு சந்தனாதித் தைலம் சாற்றி அபிஷேகம், செய்து சந்தனகாப்பு வடமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம் தொழில் அபிவிருத்தி ஏற்படும். செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செவ்வரளிமாலை நெய்தீபம் ஏற்றி ஏழுவாரம் தொடர்ந்து செய்து வந்தால் சகோதர ஒற்றுமை ஏற்படும். எல்லா பரிகாரங்களும் நெயதீபமும், மிளகு தீபமும் பொதுவானது. தேய்பிறை அஷ்டமி அன்று வழிபட்டால் நன்மை கோடி வந்து சேரும்.

    இன்று தேய்பிறை அஷ்டமிநாளில் இங்கு மத்திய மந்திரி அமித்ஷா சாமி தரிசனம் செய்ய வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) வாரணாசியில் இருந்து மாலை 3.20 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார்.

    பின்னர் அவர் மாலை 3.25 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் திருமயம் காலபைரவர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் மாலை 5.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் மாலை 5.25 மணி அளவில் தனி விமானம் மூலம் திருப்பதிக்கு செல்கிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு திருமயத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோட்டை கால பைரவர் கோவில் மற்றும் சத்தியகிரீசுவரர் கோவிலில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×