என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்கள் கனமழை எச்சரிக்கை- வானிலை மையம் தகவல்
- ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
- நாளை நீலகிரி, கோவை மலை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று முதல் 5 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும், பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை மலைப்பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும்.
நாளை (13-ந்தேதி) நீலகிரி, கோவை மலை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
14-ந்தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
15-ந்தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
16-ந்தேதி கோவையில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.






