search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இரவு நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழை: 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி
    X

    இரவு நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழை: 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி

    • வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
    • கனமழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை மழை பெய்யவில்லை. ஆனால் இரவு 9 மணி அளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் இரவு இரவு நேரத்தில் பல்வேறு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு மாநகர் பகுதியில் இரவு 9 மணி முதல் தொடர்ந்து 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. மாநகர் பகுதியில் அகில் மேடு வீதி, பஸ் நிலையம், பெரிய வலசு, வீரப்பன் சத்திரம், ரெயில் நிலையம், கருங்கல்பாளையம், நாடார் மேடு, வில்லரசம்பட்டி, அசோகபுரம், திண்டல் உள்பட பல்வேறு பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஈரோடு மோசிகீரனார் வீதியில் 50 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுது மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். வீட்டுக்குள் விஷ பூச்சிகள் நுழைந்ததால் குழந்தைகள் பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு நாடார் வீட்டில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. ஈரோடு அன்னை சத்யா நகர், மல்லிநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

    அங்குள்ள பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் செடி, கொடிகள் அடைத்து இருந்ததால் மழை நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்தது. இதனால் இப்போது மக்கள் வெளியே வர முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    சில மக்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வாலியால் கொண்டு வெளியே இறைத்து ஊற்றினர். மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி வாகனம் ஒன்று பள்ளத்தில் சிக்கியது.

    ஈரோடு ரங்கபாளையம் கே.கே.நகர் பாலத்தில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு 4 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 124 மில்லி மீட்டர் அதாவது 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது.

    இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபிசெட்டிபாளையம், கொடிவேரி, சென்னிமலை, மொடக்குறிச்சி, பவானி சாகர், வரட்டுப்பள்ளம், நம்பியூர், பெருந்துறை, அம்மாபேட்டை, கொடுமுடி, தாளவாடி, சத்தியமங்கலம் என மாவட்டம் முழுவதும் இரவு நேரம் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    நேற்று இரவு பலத்த மழையால் ஈரோட்டில் இருந்து கொடுமுடி செல்லும் டவுன் பஸ்சில் பயணிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். சிலர் குடைப்பிடித்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த கனமழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பல்வேறு இடங்களில் இரவில் மின்தடை ஏற்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பவானி-124, குண்டேரிப் பள்ளம்-86.20, ஈரோடு-80.30, கவுந்தப்பாடி-80.20, கோபி-49.20, கொடிவேரி-44, சென்னிமலை-42, மொடக்குறிச்சி-40, பவானிசாகர்-36, வரட்டுப் பள்ளம்-32, நம்பியூர்-30, எலந்தகுட்டைமேடு-29.40, பெருந்துறை-25, அம்மாபேட்டை-28.80, கொடுமுடி-22, சத்திய மங்கலம்-14, தாளவாடி-4.

    Next Story
    ×