search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
    X

    பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    • பூண்டி ஏரிக்கு கடந்த மே மாதம் முதல் கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 1284 கனஅடியாக உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை மற்றும் கிருஷ்ணா தண்ணீர் வரத்து காரணமாக பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி ஆகும். இதில் நேற்று ஏரியில் நீர் இருப்பு 34 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை பூண்டி ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவும் திருவள்ளூர் மற்றும் ஆந்திரா பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பூண்டி ஏரிக்கு நேற்று 1520 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து இன்று மேலும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 2040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி ஆகும். இதில் 2823 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 630 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. உபரி நீர் திறப்பும் 1684 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே பூண்டி ஏரிக்கு வரும் மழைநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    பூண்டி ஏரிக்கு கடந்த மே மாதம் முதல் கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதுவரை 3.5 டி.எம்.சி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்து உள்ளது. கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு தொடர்ந்து இருக்கும் என்று தெரிகிறது.

    பூண்டி ஏரியில் இருந்து உபரி நீராக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே பூண்டி ஏரி நிரம்பி உள்ளதால் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 1284 கனஅடியாக உள்ளது. ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 2799 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் தற்போது 20.78 அடிக்கு தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    புழல் ஏரிக்கு 525 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2217 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. மொத்த உயரமான 21 அடியில் 15.98 அடிக்கு தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரிக்கு 93 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியில் மொத்த கொள்ளவான 1081 மி.கனஅடியில் 165 கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    Next Story
    ×