search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு ஊழியர் கொலை வழக்கு: தேடப்பட்ட பாதிரியார் கோர்ட்டில் இன்று சரண்
    X

    பாதிரியார் ராபின்சன்

    அரசு ஊழியர் கொலை வழக்கு: தேடப்பட்ட பாதிரியார் கோர்ட்டில் இன்று சரண்

    • ஜெமினி, மைலோடு ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
    • பங்கு பேரவை துணைத் தலைவர் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மேலும் மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவையின் முன்னாள் பொருளாளராகவும் இருந்துள்ளார். இவருக்கு ஜெமினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஜெமினி, மைலோடு ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவரை, பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சேவியர் குமார், ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார். அப்போது அங்கு நடந்த தகராறில் சேவியர் குமார் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக ஜெமினி கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, பங்குத்தந்தைகள் ராபின்சன், பெனிட்டோ, பங்கு பேரவை துணைத் தலைவர் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இவர்களில் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    சேவியர் குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சேவியர் குமாரின் மனைவி ஜெமினிக்கு பணி வழங்க வேண்டும், 2 மகள்களுக்கும் ரூ. 2 கோடி வழங்க வேண்டும், மைலோடு ஆலய வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

    ஆனால் ஆலய வளாகத்திற்குள் அடக்கம் செய்வதற்கு ஐகோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உறவினர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் சேவியர் குமாரின் வீட்டிற்கு விஜய்வசந்த் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பலரும் நேரில் சந்தித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    இதற்கிடையில் சேவியர் குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் (26-ந்தேதி) போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் இந்த போராட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்கிறார்.

    இதற்கிடையில் வழக்கில் தேடப்படுபவர்கள் கோர்ட்டில் சரணடைய திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் கோர்ட்டுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வழக்கில் தேடப்பட்ட பாதிரியார் ராபின்சன் இன்று காலை திருச்செந்தூர் கோர்ட்டில் சரணடைந்தார்.

    Next Story
    ×