search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
    X

    கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

    • கோகுல்ராஜ் திட்டமிட்டு கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
    • வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார்.

    சென்னை:

    சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் சுவாதி என்ற இளம்பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.

    விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித்,செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும், தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் அமர்வில் இன்று நடைபெற்றது. யுவராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் குறைகள் உள்ளதாகவும், அந்த தவறுகளை சுட்டிக்காட்டி தங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை எனவும் வாதிட்டார்.

    இதையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோகுல்ராஜ் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகவும், அரசுத் தரப்பு சாட்சிகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவும் வாதிட்டார்.

    இதற்கிடையே, வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார். வீடியோ காட்சிகளை வைத்து நீதிபதிகள் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார். இதனால், விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாகக் கூறி, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்தது.

    அதேபோல் கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மற்றும் கோகுல்ராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில் பாதை ஆகிய பகுதிகளை நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    நீதிபதிகளின் ஆய்வு மற்றும் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    Next Story
    ×