search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரைகளை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை
    X

    கல்பாலம் பகுதியில் ஆற்றங்கரை சாலையில் வெள்ள நீர் புகுந்ததையும், அதில் தடுமாறியபடி வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளையும் காணலாம்.

    வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரைகளை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை

    • சிவகங்கை, ராமநாதபுரம், வைகை பாசன 1,2 மற்றும் 3-ம் பகுதி விவசாயிகளுக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
    • வருகிற 8-ந்தேதி வரை வைகை அணையில் நீர் திறக்கப்பட உள்ளதால் அடுத்த இரு வாரங்களுக்கு ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

    மதுரை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் வருசநாடு, சதுரகிரி உள்ளிட்ட மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதையடுத்து வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. கடந்த 10-ந்தேதி நீர்மட்டம் 71 அடியை நெருங்கியதையடுத்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    நேற்றைய கால நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 67.65 அடியாக இருந்தது. இந்த நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதி விவசாயிகள், மேலூர் ஒருபோக பாசன பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து சிவகங்கை, ராமநாதபுரம், வைகை பாசன 1,2 மற்றும் 3-ம் பகுதி விவசாயிகளுக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்த மாதம் 8-ந்தேதி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஏற்கனவே பாசனத்திற்காக வைகை அணையில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 4 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளது.

    ஏ.வி. மேம்பாலத்தின் அடியில் இருகரைகளையும் தொட்டு செல்லும் வெள்ளம்

    இதனால் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. வருகிற 8-ந்தேதி வரை சுமார் 2 ஆயிரத்து 466 கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் திறக்கப்பட உள்ளது. தற்போது இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் வைகை ஆற்றில் வருகிறது.

    இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆரப்பாளையம், செல்லூர், யானைக்கல் கரைகளை தாண்டி தண்ணீர் சாலைகளில் ஓடியது.

    இதையடுத்து வைகை ஆற்றங்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனமும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

    இருப்பினும் இருசக்கர வாகன ஓட்டிகள் தண்ணீருக்குள் வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்ல முயன்றனர்.

    மீனாட்சி கல்லூரியையொட்டிய வைகை ஆற்றங்கரை சாலை, ஆழ்வார்புரம்-ஆரப்பாளையம் ஆற்றங்கரை சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றங்கரை சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் ஏ.வி.மேம்பாலம், யானைக்கல் பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வருகிற 8-ந்தேதி வரை வைகை அணையில் நீர் திறக்கப்பட உள்ளதால் அடுத்த இரு வாரங்களுக்கு ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். இதனால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் அந்த பகுதிகளில் நடமாட வேண்டாம் எனவும், ஆற்றங்கரைகளின் அருகில் நின்று வேடிக்கை பார்ப்பதை தவிர்க்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    Next Story
    ×