search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் முதல்முறையாக ரெயில்வே டிக்கெட் பரிசோதகராக திருநங்கை நியமனம்
    X

    திருநங்கை சிந்து

    தமிழகத்தில் முதல்முறையாக ரெயில்வே டிக்கெட் பரிசோதகராக திருநங்கை நியமனம்

    • திருநங்கையாக பிறந்து விட்டோம் என்ன செய்வது என்று சோர்ந்து போய்விடவில்லை.
    • திருநங்கைகள் தங்களுக்கு தான் பிரச்சனை என்று நினைத்து மனம் தளர்ந்து விடக்கூடாது.

    திண்டுக்கல்:

    விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்கள் சாதித்து வருகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் தடம்பதித்த நிலையிலும், ஆணுக்கு நிகராக சமத்துவம் கிடைப்பதற்கு சிலநேரம் போராட வேண்டி இருக்கிறது. இந்த சூழலில் ஆணும், பெண்ணும் சேர்ந்து பிறந்த திருநங்கைகளின் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது.

    திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அதேநேரம் திருநங்கைகளுக்கு வேலை கிடைக்குமா? என்ற கேள்வியை தகர்த்து ஒருசில திருநங்கைகள் திறமையால் சாதித்து விடை எழுதி வருகின்றனர். சுயதொழில் மட்டுமின்றி மத்திய, மாநில அரசு பணிகளிலும் திருநங்கைகள் அசத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து நேற்று பதவி ஏற்றார். இதன்மூலம் தெற்கு ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

    அவருக்கு ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், முதன்மை வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி, எஸ்.ஆர்.எம். தொழிற்சங்க கோட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் ரபீக் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக திகழும் சிந்து கூறுகையில், எனது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். நான் பி.லிட் தமிழ் இலக்கியம் படித்துள்ளேன். கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரெயில்வே பணியில் சேர்ந்தேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந்தேன். ரெயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினேன்.

    இதற்கிடையே சிறு விபத்தில் எனக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மின்சார பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு மாற்றப்பட்டேன். டிக்கெட் பரிசோதகர் பயிற்சியை முடித்து, இன்று (நேற்று) பதவி ஏற்றுள்ளேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். திருநங்கையாக பிறந்து விட்டோம் என்ன செய்வது என்று சோர்ந்து போய்விடவில்லை.

    மனம் தளராமல் நன்றாக படித்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். எல்லோருடைய வாழ்விலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. எனவே திருநங்கைகள் தங்களுக்கு தான் பிரச்சனை என்று நினைத்து மனம் தளர்ந்து விடக்கூடாது. கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் கொண்டு திருநங்கைகள் முன்னேற வேண்டும் என்றார்.

    Next Story
    ×