என் மலர்
தமிழ்நாடு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- தந்தை அதிரடி கைது

- தாயார் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
- ஆத்திரம் அடைந்த கணவர் மனைவியையும், மகளையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து வீட்டை விட்டு துரத்தினார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரது தந்தை கூலித் தொழிலாளி. தாயார் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி முடித்துவிட்டு மாலையில் சிவகாசியில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மாணவி பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது தாயார் வேலைக்கு சென்றுவிட, வீட்டில் மாணவி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தந்தை பெற்ற மகள் என்றும் பாராமல் தவறாக நடக்க முயன்றதோடு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் தந்தையின் பிடியில் இருந்து மாணவி தப்பி வீட்டிற்கு வெளியே வந்தார். சிறிது நேரத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தாயிடம், தந்தை தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்றதை கண்ணீருடன் மாணவி தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் கணவரை கண்டித்துள்ளார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கணவர் மனைவியையும், மகளையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து வீட்டை விட்டு துரத்தினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கைது செய்தனர்.