என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் - எடப்பாடி பழனிசாமி
- எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி செலவு செய்வது நியாயம் தானா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
- தி.மு.க. ஆட்சியில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
ஈரோடு:
ஈரோட்டில் நடைபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு அறிமுகக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும். இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை கவனித்து கொண்டிருக்கிறது.
தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் போன்று செயல்பட்டு வருகின்றனர். காட்சியும், ஆட்சியும் மாறும். அதன் எதிர்வினை சந்திப்பீர்கள்.
எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி செலவு செய்வது நியாயம் தானா? ரூ.80 கோடிக்கு பேனா சின்னம் வைப்பதற்கு பதில் ரூ.2 கோடிக்கு வைக்கலாமே. பேனா சின்னம் வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. கலைஞர் நினைவு இடத்தில் வைத்தால் என்ன?
தி.மு.க. ஆட்சியில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தேர்தல் பயத்தினால் தி.மு.க. 20 அமைச்சர்களை களத்தில் இறக்கியுள்ளனர்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும், வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய பணம். அதுவும் கொள்ளையடித்த பணம். ஆனால் ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டு விடுங்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நிதி நிலைமையை சரிசெய்வோம் என்றனர். இன்று ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் ரூ.1.62 லட்சம் கோடி கடனை வாங்கியுள்ளது. முதலமைச்சருக்கு நாட்டு மக்களைப் பற்றி கவலை இல்லை என தெரிவித்தார்.






