search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான ரூ. 457 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
    X

    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான ரூ. 457 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

    • சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்கியது.
    • சோதனையின் போது வீடு, அலுவலகங்களின் வாயில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டது.

    லாட்டரி அதிபர் மார்டின் மீது அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கேரளாவில் இருந்து கோவை வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் மார்டினுக்கு சொந்தமான வீடு உள்பட மூன்று இடங்களில் சோதனையை துவங்கினர்.

    சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. இரண்டு நாட்கள் அமலாக்கத்துறை தீவிர சோதனை நடத்தியது. சோதனையின் போது வீடு, அலுவலகங்களின் வாயில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, வெளி ஆட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும் வேறு யாரும் உள்ளே நுழையாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

    மே 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமாக சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமைந்திருக்கும் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், இரண்டு நாட்கள் நடைபெற்ற சோதனையின் முடிவில், லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான ரூ. 457 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.

    மார்டின் மற்றும் அவரின் இதர நிறுனங்களுக்கு சொந்தமான ரூ. 457 கோடி மதிப்பிலான அசையும்/அசையா சொத்துக்கள், வைப்பு தொகை, மியூச்சுவல் ஃபண்ட், அசையா சொத்து பத்திரங்கள் வடிவில் இருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இதில், ரூ. 157.7 கோடி மதிப்பிலான வைப்புத் தொகை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்கள், ரூ. 299.16 கோடி மதிப்பிலான அசையா சொத்து பத்திரங்கள் அடங்கும்.

    Next Story
    ×