search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதி நாளை முதல் வினியோகம்
    X

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதி நாளை முதல் வினியோகம்

    • 3 மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 815 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கடந்த 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழையின் காரணமாக வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் எனவும், லேசான பாதிப்பு உள்ள வட்டங்களுக்கும் மற்றும் குமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிப்பு காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப் படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதனையடுத்து மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகள் சுமார் 4 நாட்களில் முற்றிலுமாக முடிக்கப் பட்டது.

    அதன்பின்னர் 3 மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வீடுகளை இழந்தவர்கள், பயிர்கள் சேதம், கால்நடைகள் இறப்பு உள்ளிட்டவைகளும் கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தாலுகா வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 815 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 542 ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகம் பாதிப்புள்ள பகுதிகளில் 508 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 53 ரேஷன் கார்டுகள் உள்ளன. குறைந்த பாதிப்புள்ள பகுதிகளில் 449 ரேஷன் கடைகளில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 614 ரேஷன் கார்டுகளும் உள்ளன. இவர்களுக்கு வீடு வீடாக டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி ரேஷன் கடை பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

    நேற்று முன்தினம் தொடங்கி இன்று 3-வது நாளாக டோக்கன்களை வீடு வீடாக சென்று ஊழியர்கள் வினியோகம் செய்து வருகின்ற னர். அந்த டோக்கன்களில் நிவாரண தொகை பெறுவ தற்கு நாளை முதல் அதாவது 29-ந்தேதி முதல் தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாட்களில் ரேஷன் கடைகளில் சென்று ரொக்கமாக நிவாரண தொகையை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றுடன் டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி முடிவடையும் நிலையில் நாளை (வெள்ளிக் கிழமை) காலை முதல் பொதுமக்கள் அந்தந்த பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் பணத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டுறவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டமாக வந்து நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் குறைந்தது 800 முதல் 1200 ரேஷன் கார்டுகள் வரை இருக்கும் என்பதால் ரூ.1000 வழங்கும் கடைகளுக்கு ரூ.10 லட்சம் வரை தேவைப்படும்.

    எனவே கடைகளில் பணம் பாதுகாப்பாக கொண்டு வரப்படுவதையும், விநியோகிக்கப்படுவதையும் கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பு போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி உள்ளிட்ட மாவட்டத்தில் இன்று மாலை அனைத்து கூட்டுறவு வங்கி செயலாளர்களுடன், கூட்டுறவு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.

    அதன்முடிவில் எவ்வாறு நிவாரண தொகையை வழங்குவது, கூட்ட நெரிசலை சமாளிப்பது எப்படி என்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கப் படுகிறது. தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை ரேஷன் கடைகளில் இந்த தொகை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    Next Story
    ×