search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிருஷ்ணகிரி-குந்தாரப்பள்ளி வார சந்தையில் தீபாவளியையொட்டி ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    கிருஷ்ணகிரி-குந்தாரப்பள்ளி வார சந்தையில் தீபாவளியையொட்டி ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • காலை 6 மணிக்கு துவங்கிய வார சந்தையில் தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வருகையால் களை கட்டியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள குந்தாரப்பள்ளி புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி விற்பனை நடைபெற்று வருகிறது.

    தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், திருச்சி மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர்.

    செம்மறியாடு, வெள்ளாடு, மறிக்கை ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு துவங்கிய வார சந்தையில் தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.

    ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் பெண் ஆடுகள் அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஆடுகள் வாங்கிச்செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலை விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்றும் வழக்கமாக ஒரு கிலோ 750 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் ரூ. 900க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

    சராசரியாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் சுமார் ரூ. 7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வருகையால் அந்த பகுதியே களை கட்டியுள்ளது.

    Next Story
    ×