search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உடுமலை பகுதியில் தொடர் மழை: நீர்வரத்து அதிகரிப்பால் அமராவதி ஆற்றில் வெள்ள அபாயம்
    X

    அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    உடுமலை பகுதியில் தொடர் மழை: நீர்வரத்து அதிகரிப்பால் அமராவதி ஆற்றில் வெள்ள அபாயம்

    • தொடர் மழையால் திருப்பூர் மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
    • அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    உடுமலை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் தொடர்ந்து சாரல் மழை நீடிக்கிறது.

    இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர் மழையால் திருப்பூர் மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

    மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அணையில் இன்று காலை நிலவரப்படி 83.25 அடி தண்ணீர் நிறைந்துள்ளது. அணைக்கு 10194 கன அடி நீர்வரத்து உள்ளது. முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அமராவதி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தண்ணீர் திறக்கப்படும்பட்சத்தில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் விவரம் வருமாறு:-

    மடத்துக்குளம்-45, தாராபுரம்-17, மூலனூர்-5, குண்டடம்-10, உப்பாறு அணை-16, நல்லதங்காள் ஓடை அணை-8, உடுமலை-35, அமராவதி அணை-75, திருமூர்த்தி அணை-56, திருமூர்த்தி அணை ஐ.பி.,-55. மாவட்டம் முழுவதும் மொத்தம் 338.30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    Next Story
    ×