என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விபத்தில் உயிரிழந்த ஐயப்ப பக்தர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு
- காயமடைந்த 2 நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க உத்தரவு
- காயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவு
சபரிமலையில் தரிசனம் முடித்து விட்டு, கார் மூலம் ஊர் திரும்பிக் கொண்டிருந்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முக சுந்தரபுரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் குழு, குமுளி மலைச்சாலையில் விபத்தை சந்தித்தது. நிலை தடுமாறி சுமார் 50அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட பத்து நபர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று திரும்புகையில், அவர்கள் வந்த வாகனம் உத்தமபாளையம் வட்டம், குமுளி மலைப்பாதையில் எதிர்பாராதவிதமாக விழுந்து விபத்துக்குள்ளானது. இச்செய்தியை அறிந்தவுடன், தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சரான ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரியசாமியை உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்துக்குள்ளானவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன்.
இந்த விபத்தில் நாகராஜ் (வயது 50), முனியாண்டி என்ற சாக்கு கடை முனியாண்டி, சிவக்குமார் (வயது 41), வினோத்குமார் (வயது 43), கண்ணுச்சாமி (வயது 65), தேவதாஸ் (வயது 55), கலைச்செல்வன் (வயது 35), மற்றும் கோபாலகிருஷ்ணன் (வயது 48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இவ்விபத்தில் காயமுற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 2 நபர்களுக்கு, சிறப்பு சிகிச்சை அளித்திட உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்த 2 நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






