என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராணிப்பேட்டையில் புதிய கலெக்டர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ராணிப்பேட்டையில் புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 60,000 பயனாளிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியை பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை:
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆம்பூர் வந்தார்.
நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலூர் புதிய பஸ் நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு ராணிப்பேட்டைக்கு வருகை தந்தார். அங்கு பாரதி நகரில் உள்ள ஜி.கே. ரெசிடென்சி ஓட்டலில் தங்கினார். இன்று காலை ராணிப்பேட்டை பாரதி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு 60,000 பயனாளிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியை பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதல்-அமைச்சரின் வருகையையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி தலைமையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உள்ளிட்டோர் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தப்பட்டனர். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன.






