என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொடர்ந்து பலத்த மழை: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை எட்டியது
    X

    தொடர்ந்து பலத்த மழை: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை எட்டியது

    • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வரும் நாட்களில் வேகமாக உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • புழல் ஏரிக்கும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் உள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் முதற்கட்டமாக 100 கனஅடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை தொடங்கிய கன மழை விடிய விடிய நீடித்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்ததால் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 21 அடியாக உயர்ந்து உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில், தற்போது 2850 மில்லியன் கன தண்ணீர் உள்ளது. மேலும் ஏரிக்கு நீர்வரத்து 642 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் 260 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர் பிள்ளை பாக்கம், நேமம் போன்ற ஏரிகளும் ஏற்கனவே நிரம்பி காணப்படுவதால் அங்கிருந்தும் உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வரும் நாட்களில் வேகமாக உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுபணித்துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் ஏரியில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் புழல் ஏரிக்கும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 1310 மி.கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 292 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி ஆகும். இதில் 18.76 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2763 மி.கனஅடி தண்ணீரை நிரம்பி உள்ளது.

    பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×