search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சூலூர் அருகே சிறுவன் கொலையில் உறவுப்பெண்ணிடம் விசாரணை
    X

    சூலூர் அருகே சிறுவன் கொலையில் உறவுப்பெண்ணிடம் விசாரணை

    • ஜாகீர் உசேன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் அவரது மகன் இல்லை.
    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சூலூர்:

    அசாமை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது28). இவரது மனைவி கைரொன்னிஷா (26). இவர்களுக்கு கைரூல் இஸ்லாம் (7) என்ற மகன் இருந்தான்.

    ஜாகீர் உசேன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். பின்னர் சூலூர் அருகே உள்ள சின்ன கலங்கல் பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கேயே குடும்பத்துடன் தங்கியும் வந்தார். கைரொன்னிஷாவும் கணவருடன் வேலைக்கு சென்றார்.

    தினமும் காலையில் வேலைக்கு செல்லும் கணவன், மனைவி 2 பேரும் மாலையில் தான் வீடு திரும்புவார்கள். இதனால் கைரூல் இஸ்லாம் மட்டும் வீட்டில் இருப்பார்.

    நேற்று வழக்கம் போல 2 பேரும் வேலைக்கு சென்றனர். கைரூல் இஸ்லாம் வீட்டில் இருந்தார். 11 மணியளவில் அவரது தாய் வீட்டிற்கு வந்து மகனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, தானும் சாப்பிட்டார். பின்னர் அவர் வேலைக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து சிறுவன், அருகே வசிக்கும் மற்ற சிறுவர்களுடன் விளையாட சென்றார்.

    இந்த நிலையில் ஜாகீர் உசேன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் அவரது மகன் இல்லை. அக்கம்பக்கம் தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர் சூலூர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் மாதையின் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை தேடினர்.

    அப்போது அங்குள்ள புதரில் சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பார்வையிட்டனர். அப்போது மாணவனின் கழுத்தில் பனியனால் இறுக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தது.

    இதனால் சிறுவனை யாரோ கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிறுவனை கொலை செய்தது யார்? கொலை செய்ததற்கான காரணம் என்ன? சிறுவனின் பெற்றோருக்கும், வேறு யாருக்கும் ஏதவாது முன் விரோதம் இருந்து அதில் சிறுவன் கொல்லப்பட்டனா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர்.

    அப்போது சிறுவனின் தந்தைக்கும், அவரது உறவுப்பெண்ணுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணும் அதே மில்லில் தான் வேலை பார்த்து வந்தார்.

    அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×