search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோடைகால வெளிநாட்டு சுற்றுலாவுக்கு தயாராகும் சென்னை மக்கள்: விமான கட்டணம் அதிகரிப்பு
    X

    கோடைகால வெளிநாட்டு சுற்றுலாவுக்கு தயாராகும் சென்னை மக்கள்: விமான கட்டணம் அதிகரிப்பு

    • குறைந்த நாட்கள் பயண திட்டத்தில் இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு செல்ல சுற்றுலாபயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • அமெரிக்கா, லண்டன், துபாய், பாரீஸ், பாங்காங், உட்பட பல நாடுகளுக்கு விமான கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.

    ஆலந்தூர்:

    கோடை வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட உள்ளன. மேலும் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு வெளிநாடுகள் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்ல சென்னை மக்கள் தயாராகி வருகிறார்கள். இதற்கான விமான பயண திட்டங்களை தேர்வு செய்து வருகின்றனர்.

    அவர்கள், பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் சுற்றுலா பயணம் செல்ல மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை தங்களுடைய பயணங்களை திட்டமிட்டு வருகின்றனர்.

    இதனால் சென்னையில் இருந்து விமானம் மூலம் சுற்றுலா இடங்களுக்கு செல்ல விமான டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விமான கட்டணமும் வழக்கத்தைவிட உயர்ந்துள்ளன.

    நீண்டநாட்கள் சுற்றுலா பயணத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் செர்ரி பூக்கள் பூக்கும் மாதம் என்பதால் ஜப்பான், தென்கொரியாவுக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதே போல் சவுதி அரேபியா செல்லவும் அதிகமானோர் விரும்புகிறார்கள்.

    குறைந்த நாட்கள் பயண திட்டத்தில் இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு செல்ல சுற்றுலாபயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்தியாவிற்குள் அந்த மான், ஸ்ரீநகர், மணாலி, டார்ஜிலிங், கோவா, பூரி, ரிஷிகேஷ், கொடைக்கானல், முசோரி, லட்சத்தீவு மற்றும் ஆகிய இடங்களுக்கும் செல்ல அதிகமான பயணிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதனால் விமான கட்டணம் மே மாத மத்தியில் கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கைக்கு ரூ.14ஆயிரத்து 500 முதல் ரூ.20 ஆயிரம் வைரையும், பாங்காங்-ரூ.25ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரம் வரை, சிங்கப்பூர்-ரூ.20ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை, துபாய்-ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரத்து 800 வரை, டெல்லி-ரூ.13ஆயிரம் முதல் ரூ.20ஆயிரம் வரை, கோவா-ரூ.7900 முதல் ரூ.26 ஆயிரம் வரை, லட்சத்தீவு-ரூ.23, 500, அந்தமான்-ரூ.13ஆயிரம் முதல் ரூ.15,800 வரையும் கட்டணம் உயர்ந்து இருக்கிறது.

    இதுகுறித்து சுற்றுலா விமானடிக்கெட் முன்பதிவு செய்யும் நிறுவனங்கள் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் தங்களது கோடைகால விடுமுறை பயணத்திட்டங்களை சற்று தள்ளி வைத்து உள்ளனர். மே மாத முதல் வாரத்தில் இருந்து ஜூன் மாதம் 2-வது வாரம் வரை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்வோர் தினமும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். அமெரிக்கா, லண்டன், துபாய், பாரீஸ், பாங்காங், உட்பட பல நாடுகளுக்கு விமான கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.

    மேலும் ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல, பலர் விமான டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளன.

    Next Story
    ×