search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வார இறுதி நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
    X

    வார இறுதி நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

    • சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    வார இறுதி நாளான நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) சுபமுகூர்த்தம் உள்ளிட்ட விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் இயக்கப்படுகிறது.

    தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் இன்று கூடுதலாக 550 சிறப்பு பஸ்களும், மேற்கூறப்பட்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூருவிலிருந்தும் பிற இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் சேர்த்து ஆக மொத்தம் 750 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய இதுவரை 9 ஆயிரத்து 679 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் நாளை (சனிக்கிழமை) 5 ஆயிரத்து 468 மற்றும் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 8 ஆயிரத்து 481 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×