search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னைக்குள் தீபாவளி திருடர்கள் 300 பேர் ஊடுருவல்- உஷாரய்யா... உஷாரு...
    X

    சென்னைக்குள் தீபாவளி திருடர்கள் 300 பேர் ஊடுருவல்- உஷாரய்யா... உஷாரு...

    • ஆந்திராவில் இருந்து ஊடுருவி உள்ள கொள்ளையர்கள் டிப்-டாப் தோற்றத்துடன் காணப்படுவார்கள்.
    • கடைகள் மற்றும் வணிக வீதிகளுக்கு செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையோடும் உஷாராகவும் இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தி.நகர் உள்ளிட்ட வணிக பகுதிகளில் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி 'பிக்பாக்கெட்' மற்றும் 'செயின்' பறிப்பு கொள்ளையர்கள் ஒருசில இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர்.

    தி.நகர் ரங்கநாதன் தெருவில் சிறுமி ஒருவரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    இதேபோன்று வணிக பகுதிகள் பலவற்றிலும் வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி செயின் பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டு 300 கொள்ளையர்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் உள்ள கே.வி.குப்பம், திருச்சி ராம்ஜி நகர், வேலூர், பேரணாம்பட்டு, மதுரை மேலூர் ஆகிய வெளியிடங்களில் இருந்து வந்துள்ள கொள்ளையர்கள் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இவர்கள் தவிர சென்னையை சேர்ந்த கொள்ளையர்களும் தீபாவளி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதற்கு திட்டம் வகுத்து செயல்படுவதும் தெரியவந்துள்ளது.

    தண்டையார் பேட்டை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த பிக்பாக்கெட் திருடர்களும் தீபாவளி கூட்டத்தில் புகுந்து கைவரிசை காட்டி வருவதும் தெரிய வந்துள்ளது.

    குறிப்பாக ஆந்திராவில் இருந்து ஊடுருவி உள்ள கொள்ளையர்கள் டிப்-டாப் தோற்றத்துடன் காணப்படுவார்கள். இவர்கள் கூட்ட நெரிசல் மிகுந்த கடைகள் மற்றும் வணிக பகுதிகளில் ஊடுருவி கைவரிசை காட்டுவார்கள். இவர்கள் விலை உயர்ந்த நகைகள் மற்றும் பெண்கள் தோள்களில் தொங்க விட்டுள்ள பைகளில் வைத்திருக்கும் 'மணிபர்ஸ்' உள்ளிட்ட பொருட்களை குறிவைத்து கைவரிசை காட்டுவதில் கில்லாடிகள்.

    எனவே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடைகள் மற்றும் வணிக வீதிகளுக்கு செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையோடும் உஷாராகவும் இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இந்த கொள்ளையர்கள் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்ட நெரிசலுக்குள் புகுந்து பொதுமக்கள் போலவே நடித்து கைவரிசை காட்டுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆந்திரா, திருச்சி, மதுரை, வேலூர் உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து வந்துள்ள கொள்ளையர்கள் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களின் அருகில் உள்ள லாட்ஜூகள், தங்கும் விடுதிகளில் பதுங்கி இருந்து கைவரிசை காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்கள் தங்கி இருக்கும் இடங்களை குறிவைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து உஷாரான கொள்ளையர்கள் தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். பூந்தமல்லியை அடுத்த நசரத் பேட்டை மற்றும் கேளம்பாக்கம், சிறுசேரி, பனையூர், மதுரவாயல் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளுக்கு சென்று பதுங்கி இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இடங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இப்படி தீபாவளி கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு ஊடுருவி இருக்கும் கொள்ளையர்கள் தங்களுக்குள் தனித்தனி பாணிகளை பின்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்களோடு பேச்சு கொடுத்து கொண்டே அவர்களிடம் கைவரிசை காட்டுவது, கூட்ட நெரிசலில் டிப்-டாப் உடையுடன் ஊடுருவி கைவரிசை காட்டுவது என புதுப்புது யுக்திகளை கொள்ளையர்கள் பயன்படுத்தி வருவதாகவும் போலீசார் உஷார்படுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து கொள்ளையர்களின் புகைப்படங்கள் அடங்கிய எச்சரிக்கை போர்டுகளையும் போலீசார் பொது இடங்களில் வைத்துள்ளனர்.

    இதையடுத்து தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட வணிக பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×