search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறுவனுடன் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்
    X
    சிறுவனுடன் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

    4 வயது சிறுவனை தனது இருக்கையில் அமர வைத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

    சிறுவன் பிரணவ் சாயின் போலீஸ் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று அவனது பெற்றோரிடம் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார்.
    ஆவடி:

    ஆவடி புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் கடந்த 6 மாதத்துக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இதன் முதல் போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். அவரது உத்தரவுப்படி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றிய 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற சேரலாதன் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். அப்போது அவருடன் 4 வயது பேரன் பிரணவ் சாயும் வந்திருந்தான். அவன் போலீஸ் சீருடை, தொப்பி அணிந்து கம்பீரமாக இருந்தது விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கவர்ந்தது. இதனை கவனித்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சிறுவன் பிரணவ் சாயை அருகில் அழைத்து விசாரித்தார்.

    அப்போது உற்சாகமாக பதில் அளித்த பிரணவ் சாய், ‘நானும் உங்களைப் போல் கமிஷனராக வேண்டும். போலீஸ் வேலை பிடிக்கும்’ என்றான். இதனால் உற்சாகம் அடைந்த கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், சிறுவன் பிரணவ் சாயை அவரே தூக்கி சென்று தனது கமிஷனர் இருக்கையில் அமரவைத்தார். காக்கி சீருடை, தொப்பியுடன் கம்பீரமாக கமிஷனர் இருக்கையில் இருந்த சிறுவன் பிரணவ் சாய்க்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.

    இதைத்தொடர்ந்து கமிஷனர் இருக்கையில் அமர்ந்து இருந்த பேரனுடன் ஓய்வு பெற்ற சேரலாதன் பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    மேலும் சிறுவன் பிரணவ் சாயின் போலீஸ் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று அவனது பெற்றோரிடம் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார். மேலும் அவர் சிறுவனையும் கொஞ்சி மகிழ்ந்தார். இந்த காட்சி விழாவில் பங்கேற்றவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.

    சிறுவன் பிரணவ் கமிஷனர் இருக்கையில் அமர்ந்து இருக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    Next Story
    ×