search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விபத்தில் உருக்குலைந்த மினிலாரியை படத்தில் காணலாம்.
    X
    விபத்தில் உருக்குலைந்த மினிலாரியை படத்தில் காணலாம்.

    நின்ற லாரி மீது மினி லாரி மோதல்- டைல்ஸ் கடை அதிபர் உள்பட 4 பேர் பலி

    சிதம்பரம் அருகே இன்று அதிகாலையில் நின்ற லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் டைல்ஸ் கடை அதிபர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
    சிதம்பரம்:

    சேலம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 38). இவர் அந்த பகுதியில் டைல்ஸ் மற்றும் கிரானைட் கடை வைத்துள்ளார். இவரது மாமனார் துரைசாமி. இவர் மயிலாடுதுறை அருகே மாதானம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    இந்த வீட்டுக்கு டைல்ஸ் மற்றும் கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு மினிலாரியில் செல்வக்குமார் மாதானம் நோக்கி நேற்று இரவு புறப்பட்டார். இந்த லாரியை சேலத்தை சேர்ந்த டிரைவர் நகுலேந்திரன் (28) என்பவர் ஓட்டினார். லாரியில் செல்வக்குமாரின் மனைவியின் தங்கை கற்பகவள்ளி (27), செல்வக்குமாரின் மகன் மிதுன் (4) ஆகியோர் சென்றனர். மினி லாரியின் பின்புறம் தொழிலாளர்கள் 4 பேர் அமர்ந்து இருந்தனர்.

    இந்தமினி லாரி இன்று அதிகாலை சிதம்பரம் அருகே அம்மாபேட்டை கூத்தங்கோவில் சிதம்பரம்-மயிலாடுதுறை புறவழி சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு நின்ற லாரி மீது டைல்ஸ் ஏற்றி சென்ற மினிலாரி பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் மினிலாரியின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில் செல்வக்குமார் அவரது மகன் மிதுன், கற்பகவள்ளி, லாரி டிரைவர் நகுலேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    மேலும் டைல்ஸ் ஏற்றிவந்த லாரியின் பின்புறம் அமர்ந்திருந்த 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் வலியால் அலறினர். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்த 4 பேர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று திரும்பினர். விபத்து குறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×