search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்ச் செடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சி
    X
    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்ச் செடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சி

    மலர் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா

    2 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டு தோறும் மே மாதத்தில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆன்லைன் வாயிலாக கண்காட்சி நடந்தது. மக்கள் வீட்டில் இருந்தபடி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண செடிகளை கண்டு ரசித்தனர்.

    தற்போது தொற்று முழுவதும் குறைந்து சுற்றுலா யணிகள் வருகையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    மலர் கண்காட்சி தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு விழாவின் சிறப்பு அம்சமாக 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பெகோனியா, செம்பா, புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், க்ரைசாந்திமம் போன்ற மலர்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    இதுதவிர சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பூங்காவில் வண்ண மலர்த் தொட்டிகள் பல வடிவங்களில் காட்சிப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    கண்காட்சியில் பல வண்ண மலர்களை கொண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விலங்குகள், பல்வேறு வடிவிலான பொருட்கள் வடிவமைக்கும் பணியும் நடக்கிறது. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையிலும் மலர் செடிகள், அரிய வகை தாவரங்களும் வைக்கப்பட்டு வருகிறது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் சுற்றுலா பயணிகள், குழந்தைகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்கா முழுவதும் அழகுபடுத்தும் பணியும் நடக்கிறது. இந்த பணிகளில் தோட்டக்கலை அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்களில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாகவே காணப்பட்டனர்.

    குதிரைபந்தயம், மலர் கண்காட்சி, ரோஜா, காய்கறிகள் கண்காட்சி, பழ கண்காட்சி வருகிற நாட்களில் நடைபெற உள்ளதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    Next Story
    ×