search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைது
    X
    கைது

    தேவகோட்டையில் கள்ளக்காதலி மீது ‘ஆசிட்’ வீசியவர் கைது

    தேவகோட்டையில் கள்ளக்காதலி மீது ‘ஆசிட்’ வீசியவரை மேற்குவங்காளத்தில் கைது செய்த போலீசார், அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
    தேவகோட்டை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துராமலட்சுமி(வயது35). இவருக்கு திருமணமாகி விட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரித்து தாயுடன் வசித்து வந்தார்.

    முத்துராமலட்சுமி ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். தேனி மாவட்டத்தில் ஜவுளி வியாபாரம் செய்தபோது போடிநாயக்கனூரை சேர்ந்த செல்வம் (43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    செல்வமும் ஜவுளி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் சேர்ந்து ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு இடையிலான பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    அவர்கள் இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முத்து ராமலட்சுமி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு செல்வம் மறுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று செல்வம் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதில் ஆத்திரம் அடைந்த செல்வம் வீட்டில் வாங்கி வைத்திருந்த ஆசிட்டை எடுத்து முத்து ராமலட்சுமியின் முகத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ஆசிட் வீசியதால் முகம் வெந்துபோன முத்துராம லட்சுமி வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் என்பதால் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் சேர்ந்தார். தன் மீது ஆசிட் வீசப்பட்டது குறித்து நெல்லை போலீசாரிடம் முத்துராமலட்சுமி புகார் செய்தார்.

    ஆசிட் வீசிய சம்பவம் தேவகோட்டையில் நடந்து இருப்பதால் அதுபற்றி சிவகங்கை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் முத்துராமலட்சுமி வசித்து வந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    ஆசிட் வீச்சு தொடர்பாக முத்துராமலட்சுமியின் கள்ளக்காதலன் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் எங்கு இருக்கிறார்? என்று கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    செல்வம் இருக்கும் இடத்தை கண்டறிய அவரது செல்போனை கண்காணித்தப்படி இருந்தனர். அதில் அவர் மேற்கு வங்காளத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தேவகோட்டை நகர இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பால சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அங்கு சென்று செல்வத்தை கைது செய்தனர்.

    மேற்குவங்காளத்தில் கைது செய்யப்பட்ட செல்வத்தை போலீசார் தேவகோட்டைக்கு நேற்று இரவு அழைத்து வந்தனர். வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய பிறகு தேவகோட்டை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

    அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் செல்வம் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×