search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    லஞ்சம் வாங்கியதாக வெளியான வீடியோ காட்சி.
    X
    லஞ்சம் வாங்கியதாக வெளியான வீடியோ காட்சி.

    குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் செய்ய கட்டாய லஞ்சம் வாங்கும் வட்ட வழங்கல் அதிகாரி

    குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு பொதுமக்களிடம் கட்டாய லஞ்சம் கேட்பதாக வட்ட வழங்கல் அதிகாரி மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வட்ட வழங்கல் அதிகாரியாக முருகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஆவுடையார்கோவிலுக்கு மாறுதலாகி வந்துள்ளார். இந்தநிலையில் குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு பொதுமக்களிடம் கட்டாய லஞ்சம் கேட்பதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    குறிப்பாக புதிய குடும்ப அட்டைக்கு ரூ.1000, பெயர் சேர்க்க ரூ.500, பெயர் திருத்தம் செய்ய ரூ.200 என நிர்ணயம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் செய்வதற்காக ஆவுடையார்கோவில் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

    அப்போது வட்ட வழங்கல் அதிகாரி முருகேசன் அவரிடம் ரூ.200 லஞ்சம் கேட்டுள்ளார். வேறு வழியின்றி ரூ.200 கொடுத்து அந்தப் பெண் தனது வேலையை முடித்துக் கொண்டு சென்றுள்ளார். இதனை சில நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.
    Next Story
    ×