search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருட்டு நடைபெற்ற பழமைவாய்ந்த சென்றாய பெருமாள் கோவில்.
    X
    திருட்டு நடைபெற்ற பழமைவாய்ந்த சென்றாய பெருமாள் கோவில்.

    ஓமலூர் சென்றாய பெருமாள் கோவிலில் ஓட்டை பிரித்து 30 பவுன் நகை- பணம் கொள்ளை

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள பழமை வாய்ந்த சென்றாய பெருமாள் கோவிலில் ஓட்டை பிரித்து 30 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பச்சனம்பட்டி கிராமம் பனங்காடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த சென்றாய பெருமாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் நேற்று மாலை பூஜை முடிந்ததும் வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு அர்ச்சகர் முரளி வீட்டுக்கு சென்றார். இன்று காலை பூஜைகள் செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மூலவர் அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் உள்ளே சென்று பார்த்தபோது மூலவர் அறையில் சாமியின் ஆபரணம் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டி, உற்சவர் கழுத்தில் இருந்த திருமாங்கல்யம், கிரீடம், தங்காசுகள் என 30 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம் ரூ.9000 மற்றும் உற்சவர் தாயார் கழுத்தில் கிடந்த தங்கத்தில் ஆன திருமாங்கல்யம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது.

    கோவில் கதவை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் நள்ளிரவில் கோவில் மேற்கூரை ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கி இரும்பு பெட்டியில் இருந்த பணம் மற்றும் சாமி நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

    இது பற்றி அர்ச்சகர் ஊர் மக்களிடமும் ஓமலூர் போலீஸ் நிலையத்திலும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோவிலை பார்வையிட்டு, திருட்டு குறித்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சி.சி.டி.வி. காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கொள்ளை சம்பவம் ஓமலூர், பச்சனம்பட்டி, பனங்காடு பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×