search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோமனூர் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள விசைத்தறிகள்
    X
    சோமனூர் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள விசைத்தறிகள்

    கோவை, திருப்பூரில் சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறி கூடங்கள் வேலைநிறுத்தம்

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு 50 கிலோ கொண்ட நூல் 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது விலை ஏற்றத்தின் காரணமாக 17 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.
    கருமத்தம்பட்டி:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சேலை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தற்போது சேலை உற்பத்தியாளர்களிடம் இருந்து நூல், ஜரிகை, பாலியஸ்டர் நூல் போன்றவை வாங்கி கூலி அடிப்படையில், விசைத்தறி உரிமையாளர்கள் சேலை உற்பத்தி செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சேலை உற்பத்தியாளர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சேலை உற்பத்தியை 15 நாட்களுக்கு நிறுத்த சேலை உற்பத்தியாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, சோமனூர், கிட்டாம்பாளையம், பதுவம்பள்ளி, தொட்டியபாளையம், மாதப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் சாமலாபுரம், கோம்பக்காடு, பள்ளப்பாளையம் ஆகிய பகுதிகளில் செயல்படும் சேலை தயாரிப்பு விசைத்தறி கூடங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

    உற்பத்தி நிறுத்தப்பட்டதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து சேலை உற்பத்தியாளர் ரவி என்பவர் கூறியதாவது:-

    நூல் விலை தற்போது 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். நூல் விலை அதிகரிப்பதால், சேலையின் உற்பத்தி விலையும் அதிகரிக்கப்படுகிறது. ஆனால் நெசவு செய்யும் சேலையை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடிவதில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு 50 கிலோ கொண்ட நூல் 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது விலை ஏற்றத்தின் காரணமாக 17 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. வார்ப்பு நூல் 15 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.

    இதனால் சேலை விலை சராசரியாக ரூபாய் 30 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நூல் விலை தினமும் ஏறுவதால் சமாளிக்க முடியவில்லை. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×