search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி
    X
    வீராணம் ஏரி

    வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 550 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

    சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து 57 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தது. வீராணம் ஏரியின் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 45.50 அடியாக இருந்தது. மேலும் லால்பேட்டை, காட்டுமன்னார் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 550 கனஅடி நீர் வி.என்.எஸ். மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது.

    சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து 57 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரிக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    வீராணம் ஏரியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×